Tuesday, January 21, 2014

Cloud Computing - மேகக் கணினியம்'


அரசுத் துறையில் மேம்படுத்தப்பட்ட கணினி கட்டமைப்பை ஏற்படுத்த, தமிழ்நாடு மாநில தரவு மையத்தில், மேகக் கணினியத்தை நிறுவுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு


தமிழ்நாடு மாநில தரவு மையத்தில், Cloud Computing எனப்படும் 'மேகக் கணினியம்' நிறுவதற்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அதற்கென 11 கோடியே 39 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். திறன் மேம்பாட்டுக்கான தேவை, கணினி பயன்பாடுகளின் பேரிடர் தரவு மீட்பு போன்ற எண்ணற்ற பயன்கள் இந்த மேகக் கணினியம் உதவிகரமாக இருக்கும்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மக்களும் விரைவாகவும், எளிதாகவும் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி, உலகமே சிறு கிராமம் என்று சொல்லும் அளவுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை உலகை சுருக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில், 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை மூலம் உலகளாவிய தொடர்புடைய தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனங்கள் பல தங்களது கிளைகளை தமிழகத்தில் துவக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன - அரசுப் பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன - மேலும் பள்ளிகளில் கணினிகள் மூலம் வகுப்பு நடத்தும் முறையும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது - கணினித்துறையில் தற்போது பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம் 'மேகக் கணினியம்' அதாவது Cloud Computing ஆகும் - இது கணினித் திறனை இணையத்தின் வாயிலாக பெறக்கூடிய ஒரு தொழில்நுட்பம் ஆகும் - இதன் மூலம் கணினித் திறன்களை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து உள் கட்டுமான சேவை, மென்பொருள் தளசேவை மற்றும் மென்பொருள் சேவை ஆகியவற்றை எளிதாகப் பெற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு மாநில தரவு மையம் அனைத்து அரசு துறைகளுக்கும் தேவையான, பாதுகாப்பான நம்பகத்தன்மை வாய்ந்த, மேம்படுத்தப்பட்ட பகிர்ந்தளிக்கக்கூடிய தடையற்ற கணினி கட்டமைப்பை வழங்கி வருகிறது - மேலும், அரசுத் துறையில் மேம்படுத்தப்பட்ட கணினி கட்டமைப்பை ஏற்படுத்த மாநில தரவு மையத்திற்கு மேகக் கணினியம் அவசியமான ஒன்றாகும் - இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் கணினித் திறன் சிறந்த முறையில் தொகுக்கப்படும் - இதன்மூலம், அரசுத் துறைகள் தங்களுக்கென தனியாக கட்டமைப்பு ஏற்படுத்துவதால் ஏற்படும் காலதாமதம் மற்றும் கணினி திறனை குறைவாக பயன்படுத்துதல் தவிர்க்கப்படும் - மேலும், திறன் மேம்பாட்டுக்கான தேவை, கணினி பயன்பாடுகளின் பேரிடர் தரவு மீட்பு ஆகியவற்றிற்கு இந்த மேகக் கணினியம் பெரும் உதவிக்கரமாக இருக்கும் - குறைவான செலவு, பகிர்ந்தளிக்கப்பட்ட உள்கட்டுமானம், குறைவான மேலாண்மை செலவு, பரந்த அளவிலான பயன்பாடுகளையும் உடனடியாக அணுக முடிவது போன்ற எண்ணற்ற பயன்கள் இந்த மேகக் கணினியம் மூலம் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய பயன்மிக்க மேகக் கணினியத்தை தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் நிறுவுவதற்கும் அதற்கென 11 கோடியே 39 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Followers

J.ELANGOVAN.TRICHY